தடா அருவியும் பயண அனுபவமும்
Posted by சூர்யா மேல் ஜனவரி 24, 2009
நான் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த நேரம் அது. என்னுடன் இருந்த எனது நண்பர் அப்பொழுது அமெரிக்கா சென்று விட்டு இரண்டு வருடம் கழித்து வந்திருந்தார். அங்கே அவர் பார்த்த மலைகளைப் பற்றியும் அங்கிருந்த அருவிகளைப் பற்றியும் விவரித்தவர், தனக்கு அருவிகள் இருக்கும் இடங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் தமிழ் நாட்டில் உள்ள அருவிகளில் குற்றாலத்தைத் தவிர வேறு எங்கும் சென்றதில்லை, இம்முறையாவது நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அருகில் இருக்கும் அருவிகளுக்குச் சென்று வரவேண்டும் என்றார்.
நான் அவரிடம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று வந்த அனுபத்தையும், பார்த்த அருவிகளைப் பற்றியும் கூறியவுடன் அவர் என்னை நேரம் கிடைக்கும்போது ஒவ்வொரு இடமாக சென்று வரலாம், எங்கே இங்கே சென்னைக்கு அருகில் எந்த ஒரு அருவியும் இல்லை என்றதும், நான் இங்கு சென்னைக்கு அருகில் இரண்டு அருவிகள் உள்ளது என்றும் அதன் பெயர் கொனே மற்றும் தடா என்றதும் அவர் உடனே இந்த வாரம் எதாவது ஒரு அருவிக்கு சென்று வரலாம் என ஆரம்பித்துவிட்டார். உடன் நண்பர்கள் இருவரை அழைத்துக்கொண்டு அந்த வார இருதியிலேயே தடா அருவிக்கு செல்லத் தயாரானோம். எங்களுக்கு இயல்பாகவே வார இறுதியிலும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும், அந்த வார வேலையை எல்லாம் ஒத்திப்போட்டு விட்டு அனைத்தையும் மறந்து சென்னையிலிருந்து சனிக்கிழமை காலை ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டோம்.
சென்னையிலிருந்து காலஹஸ்தி சாலையில் சுமார் 95 கி.மீட்டர் தொலைவில் தான் தடா உள்ளது. தடா அருவிக்கு செல்ல வேண்டுமானால் வரதய்யா பாளையம் சென்று அங்கிருந்துதான் ஒரு குருகிய ரோட்டில் உப்பலமடுகு செக்போஸ்ட் வழியாக செல்ல வேண்டியிருக்கிறது. உப்பலமடுகு செக்போஸ்ட்டில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரம் காட்டுக்குள் சென்று அதுவும் கரடு முரடான பாதையில் ஒரு இடத்திற்கு மேல் காரில் செல்ல முடிவதில்லை. நாங்கள் முயன்ற வரை உள்ளே சென்று ஒரு வீட்டின் அருகில் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்காரரிடம் வழிகேட்டு அவரிடம் நாங்கள் வரும் வரை வண்டியை இங்கு விட்டுச் செல்வதையும் கூறிப் புறப்பட்டோம்.
அவர் சொன்ன பாதை வழியாக நாங்கள் நடையைக் கட்ட ஆரம்பித்தோம். நாங்கள் இங்கு வருவதற்கு முன்பே நன்கு இந்த இடத்தைப் பற்றி தெரிந்திருந்ததால், நடக்கும் தூரத்தைப் பற்றியும் தனிமையான ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பாதை மற்றும் இங்கு நடக்கும் வண்டி சம்பத்தப்பட்ட திருட்டுகள் பற்றியும் அறிந்து வைத்திருந்தது மிகவும் உதவியாக இருந்தது. இரண்டு கி.மீட்டர் நடந்ததும் மலையடிவாரம் தெரிந்தது, அங்கு ஒரு சான்ட்ரோ கார் நிற்பதைப் பார்த்ததும் யாரோ நமக்கு முன்னர் வந்திருக்கிறார்கள் என்று சொல்லி காரை நெருங்கினோம்.
அங்கு சான்ட்ரோ காரின் கதவுக் கண்ணாடி உடைந்திருப்பதைப் பார்த்து சுற்றும் முற்றும் பார்த்தோம். அந்த இடத்தில் யாருமே இல்லை, நல்ல வேலை நம் வண்டியை ஒருவர் வீட்டில் நிறுத்தி வந்தோம் என நினைத்து சற்று ஆறுதல் அடைந்து மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். அந்த இடத்தில் இருந்து நல்ல அடர்த்தியான மரங்கள் அடங்கிய காடு ஆரம்பிக்கிறது, சிலு சிலுவென காற்று அடிக்க தொடர்ந்து மலையில் எற ஆரம்பித்தோம்.
சிறிது தூரத்தில் அருவியில் இருந்து வரும் தண்ணீர் சிறு ஆறு போல ஓடிக்கொண்டிருந்தது. அதை ஒட்டியே பாறைகளுக்கு நடுவே இருக்கும் இடுக்குகளில் ஏற ஆரம்பித்தோம், சிறிது தூரம் சென்றதும் குடும்பத்துடன் நான்கு பேர் குளித்துக் கொண்டு இருந்தனர். அவர்களைப் பார்த்ததும் தான் எங்களுக்கு நாங்கள் வரும் வழியில் நின்றிருந்த சான்ட்ரோ கார் ஞாபகம் வந்து அவர்களிடம் நாங்கள் பார்த்ததை விளக்கியதும் அவர்கள் கொஞ்சம் பதட்டத்துக்குள்ளானதைப் பார்தததும் நாங்கள் சார் இங்கு இது சாதாரணமாக இந்த இடத்தில் நடக்கும் விஷயம் தான் நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொல்லிவிட்டு மேலே உள்ள அருவியை நோக்கி நடையை கட்டினோம். தங்கள் குடும்பத்துடன் வருபவர்கள், இவர்கள் குளிக்கும் இடத்தை தாண்டி செல்ல முடியாது (மாட்டார்கள்) என்பதை மேலே ஏறும்போது நாங்கள் தெரிந்துகொண்டோம்.
கரடு முரடான வழுக்கும் பறைகளுக்கு இடையில் பல முறை சறுக்கி விழுந்து மேலே உள்ள அருவிக்கு சென்றே தீரவேண்டும் என்ற ஒரு வைராக்கியத்துடன் ஏற, இடையில் சிறிது தூரத்தில் சின்ன அருவி ஒன்றை பார்க்க நேர்ந்தது. அது போல் உள்ள அருவியை நாம் திரைப்படத்தில் தான் பார்த்திருப்போம், ஆம் அது ‘மின்சார கனவு’ படத்தில் ‘தங்கத் தாமரை மகளே’ என்ற பாடலில் வரும் அருவி மாதிரியே இருந்தது. அது போல் அருவியைப் பார்த்தால் யாருக்குமே அந்த அருவியில் போய் சற்று நேரம் குளிக்கத் தோன்றுவது இயல்பு தான். நாங்கள் சிறிது நேரம் குளித்து விட்டு கிளம்பும்போது எங்களுடன் வந்த நண்பருக்கு அந்த அருவியை விட்டு வர மனமே வரவில்லை.
ஏனென்றால் மேலும் நாங்கள் மெயின் அருவியை அடைய சிறிது தூரம் வழுவழுப்பான பாறைகளில் போராட்டமாக ஏற வேண்டி வருமே என்பது தான் அவரது தயக்கத்திற்கு காரணம். அவரையும் இழுத்துக்கொண்டு ஒரு வழியாக ஒரு மணி நேரத்தில் மெயின் அருவி கொட்டும் இடத்திற்கு சென்றடைந்தோம். அந்த இடத்தில் இருந்து அந்த தடா அருவியைப் பார்த்தபொழுது ஆஹா… என்ன இடம்.. பலத்த சத்தத்துடனும் சிலு சிலுவென உடம்பில் பட்ட சாரலுடனும் இருந்த அந்த அருவி என்னை கேரளாவில் சாலக்குடி அருகில் உள்ள அதிரப்பள்ளி (புன்னகை மன்னன்) அருவியை ஞாபகப்படுத்தியது.
நாங்கள் எவ்வளவோ முயன்றும் அந்த அருவியில் விழும் தண்ணீரில் கூட குளிக்க முடியவில்லை, அந்த அளவு தண்ணீர் அதி வேகமாக வந்ததும், அருவியின் அருகில் உள்ள பாறைகள் வழுக்கும்படியாக இருந்ததாலும் எங்களினால் அருவியைப் பார்த்து ரசிக்க மட்டுமே முடிந்தது. பல புகைப்படங்களை நாங்கள் எடுத்துக்கொண்டு மீண்டும் கீழே இறங்கலாம் என்றதும் தான் ஆஹா… வந்த மாதிரியே பல பாறைகளில் ஏறி இறங்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டு வேறு வழியில்லாமல் ஒரு மனதாக இறங்கி கீழே நாங்கள் முன்னமே பார்த்த அருவியில் குளித்துவிட்டு மாலை சென்னை திரும்பினோம்.
காட்டுக்குள் இவ்வளவு தூரம் நடந்து சென்றது எங்களுக்கு அதுவே முதல் முறை மற்றும் எங்களில் அது ஒரு மறக்க முடியாத ஒரு பயணமாக அமைந்தது.
Anandan said
ஏன் ராஜா, வெவ்வேற ஊருக்கு எல்லாம் போன அனுபவம் (எ.கா. பத்தாம், பட்டாயா) எல்லாம் எழுத மாட்டியா ? எப்பப் பாரு, காடு, மலை, தண்ணி, காத்துன்னுட்டு…. போரடிக்குது… இந்த ட்ரிப்-ல, யான, பூனை எல்லாம் பார்கலையா ராசா…
ரொம்ப ஆவலா, நானும் நம்ம கோவாலும் காத்துகிட்டு இருக்கோம்; நீ எழுத வேண்டியதுதா; நாங்க அதைக் கொண்டாட வேண்டியதுதா….
அந்த அமெரிக்கா friend ஊருக்குப் போயிட்டாரா ராசா…
சூர்யா said
மொதல்ல நம்ம ஊரு, குச்சிங், அப்புறம் பதாம் பட்டாயா எல்லாம் கண்டிப்பா வரும் ராஜ்…