சமீபத்தில் சன் டிவியில் “அசத்தப்போவது யாரு” நிகழ்ச்சியை நண்பர்களுடன் பார்த்தேன். அதில் திண்டுக்கல் லியோனி அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவருடைய பட்டிமன்றம் நாம் நிறைய பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அவருடைய பட்டிமன்ற நிகழ்ச்சியிலேயே “பழைய பாடலா புதிய பாடலா” மிகவும் பிரபலமானது. பட்டி தொட்டி எல்லாம் ஒரு கால கட்டத்தில் அது தான் ஒலித்துக்கொண்டு இருந்தது. அப்பொழுது எங்கு சுற்றுலா சென்றாலும் வண்டியில் லியோனியின் கேசட்கள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி தொடங்கும்போதே லியோனி தன்னுடைய அசத்தலை ஆரம்பித்துவிட்டார். நிகழ்ச்சியில் ஒவ்வொரு அசத்தல் மன்னரும் வந்து அவரவர் திறமையை காண்பித்து முடித்ததும் மதன் இது எப்படி சார் இருந்தது என்று லியோனியிடம் கேட்டதும் அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு எடுத்துக்காட்டை ஞாபகப்படுத்தி அவர் சொன்ன விதம் ஒவ்வொன்றும் ஆகா அசத்தல். அவரிடம் உள்ள அந்த டைமிங் மற்றும் பேச்சில் உள்ள நகைச்சுவை உணர்வு வியக்கவைத்தது. பட்டிமன்றம் என்றால் எல்லாம் நன்றாக தயார் நிலையில் தான் வருவார்கள் அதில் அப்படி பேசுவது வியப்பை தரவில்லை, ஆனால் இந்த மாதிரியான நிகழ்ச்சியில் அந்த இடத்தில் பேசும்பொழுது நல்ல அனுபவம் மற்றும் கோர்வையான பல நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி பேசும் அளவுக்கு திறமை வேண்டும், அது லியோனி போல் சில பேரால் மட்டுமே பேச முடியும். நிகழ்ச்சியின் முடிவில் மதன்பாப் இந்த நிகழ்ச்சியில் இவர்கள் எல்லாம் அசத்தல் மன்னர்கள் தான் ஆனால் நீங்கள் தான் எங்களை எல்லாம் அசத்தி “அசத்தல் சக்கரவர்த்தி” ஆகி விட்டீர்கள் என்றார்.
உண்மை தான், லியோனி என்றுமே அசத்தல் சக்கரவர்த்தி தான்.