கர்நாடக அரசைக் கண்டித்தும், கன்னட அமைப்புகளின் வன்முறைகளை எதிர்த்தும் தமிழ் திரையுலகினர் அனைவரும் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். இதில் ரஜினி, கமல் உட்பட அனைத்து திரையுலக கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்காக சென்னை சேப்பாக்கம் அரசினர் மாளிகை எதிரில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது.
காலை 8 மணிக்குத் தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்த போராட்டத்தின் காரணமாக உலகமெங்கும் நடைபெறவிருந்த படப்பிடிப்புகளும், தமிழக திரை அரங்குகளில் காலை மற்றும் பகல் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. கர்நாடகாவில் அரசியல் தலைவர்கள் தேர்தலுக்காக ஆட்டம் போடுகிறார்கள் என்றும் இதை முதலமைச்சர் உடனடியாக தடுத்து இப்பொழுதே நகத்தால் கிள்ளி எறிய வேண்டும் என்றும் ரஜினிகாந்த் ஆவேசமாகப் பேசினார். தமிழ்த் திரையுலகமே ஒரே இடத்தில் ஒன்று கூடி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டது நமக்குள் இருக்கும் ஒற்றுமையைக் காட்டியது.