கெத்தை பலருக்கு பரிச்சயமில்லாத ஊர். அது தமிழ்நாடு நீர் மின் உற்பத்தி நிலையங்களில் மிகவும் முக்கியமான ஒன்று. நான் அப்பொழுது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் அப்பா தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். எனக்கு அரை பரீட்சை ஆரம்பிக்கும் சமயம். நல்ல மழை காலம் வேறு. அப்பொழுதெல்லாம் பள்ளிக்கு நடந்துதான் செல்ல வேண்டும். சுமார் 5 கி.மீ தினமும் நாங்கள் (3 தோழிகள்) அரசு குடியிருப்பிலிருந்து நடந்துதான் செல்வோம், அதுவும் ஒரு இனிமையான காலம்.
அரை பரீட்சையில் முதல் பரீட்சை தமிழ். நானும் எனது தோழியும் எங்கள் வீட்டில் படித்துக் கொண்டிருந்தபோது மணி சுமார் இரவு 7.30. நல்ல மழை சோவென பெய்து கொண்டிருந்தது. திடீரென்று பலத்த இடி இடித்தது.. இதுவரை அப்படி ஒரு இடியை நாங்கள் கேட்டதே இல்லை. இடியோடு பலத்த மின்னலும் கூட.. அம்மா இடியை கேட்டு இந்த இடி கண்டிப்ப்பாக எங்கோ விழுந்திருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த இரவு முழுவதும் மழை விடாது பெய்து கொண்டிருந்தது. மறுநாள் காலை வழக்கம் போல் நானும் தம்பியும் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தோம். அப்பா சேவிங் செய்து கொண்டிருந்தார். திடீரென்று வெளியே நிறைய பேர் கத்தும் சத்தம். என்னவென்று பார்க்க வெளியே சென்றோம். கேம்பில் உள்ளவர்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். கீழ் லைனில் வசிக்கும் எனது தம்பியின் நண்பன் அழுதுகொண்டே ஓடிக்கொண்டிருந்தான். அவனிடம் என்னவென்று விசாரித்தபோது அவன் ஓ வென்று அழுதான். ……